இந்தியா

மாணவியை பலாத்காரம் செய்து தீர்த்துக்கட்டிய கொடூரம்.. குற்றம்சாட்டப்பட்ட காவலாளி தற்கொலை

Published On 2023-06-07 05:36 GMT   |   Update On 2023-06-08 02:51 GMT
  • உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
  • இந்த வழக்கில் விடுதி காவலாளி மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்தது.

மும்பை:

மும்பையில் 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சார்னி சாலையில் உள்ள அரசு விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவியை காணவில்லை என நேற்று மாலை காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். விடுதியின் நான்காவது மாடியில் அவர் தங்கியிருந்த அறை வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, அந்த மாணவியின் கழுத்து துணியால் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.

மாணவியின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், இந்த வழக்கில் விடுதி காவலாளி மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்தது. அவரது நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க தொடங்கிய சமயத்தில், அவர் நேற்று காலையிலேயே சார்னி சாலை ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அவர் மாணவியை கொலை செய்தபின்னர், ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

Tags:    

Similar News