இந்தியா

இந்தியாவுக்கு உரம், அரிய வகை கனிமங்கள் வழங்க தயார்- சீனா அறிவிப்பு

Published On 2025-08-19 12:23 IST   |   Update On 2025-08-19 12:23:00 IST
  • சீனா​வின் தியான்​ஜின் நகரில் வருகிற 31, செப்​டம்​பர் 1 ஆகிய தேதி​களில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் வரு​டாந்​திர உச்சி மாநாடு நடை​பெறவுள்​ளது.
  • தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வாங் யி 24-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.

சீன வெளியுறவு மந்திரி வாங் யி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். அவரை மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றனர்.

பின்னர் சீன வெளியுறவு மந்திரி வாங் யி மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது. அனைத்து வடிவங்களிலும் வரும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது இரு நாடுகளின் முக்கிய முன்னுரிமையாகும். எங்களின் பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகள் இடையே நிலையான கூட்டுறவும், எதிர்கால நல்லுறவும் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு உரம், அரிய வகை கனிமங்கள், சுரங்கபாதை எந்திரங்களை வழங்க சீனா தயாராக இருப்பதாக ஜெய்சங்கரிடம் அவர் உறுதியளித்தார். இது தொடர்பான வினியோகம் மீண்டும் தொடங்கும் என்று வாங் யி தெரிவித்து உள்ளார்.

கடந்த மாதம் ஜெய்சங்கர் சீனாவுக்கு சென்ற போது உரம், அரியவகை கனிமங்கள் வினியோகம் தொடர்பான பிரச்சனையை வாங்யி-யிடம் எழுப்பியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவர் தற்போது இந்த உறுதியை அளித்து உள்ளார்.

தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அவரிடம் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

சீன வெளியுறவு மந்திரி வாங் யி இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

சீனாவின் தியான்ஜின் நகரில் வருகிற 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் சீனா செல்வார் என எதிர்பாார்க்கப்படும் நிலையில், மோடி-வாங் யி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்திய-சீனா எல்லை விவகாரங்கள் தொடா்பான 23-வது சுற்று பேச்சுவாா்த்தை சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. இதில் அஜித் தோவல் பங்கேற்றார். இதைத்தொடா்ந்து, தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வாங் யி 24-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.

Tags:    

Similar News