காரில் சிக்கி பலியான வாலிபர் உடலை 15 கி.மீ. இழுத்து சென்ற கொடூரம்
- ஹனிமி ரெட்டி பள்ளி என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த கார் ஜென்னி எரிசாமி மீது மோதியது.
- வாகன ஓட்டிகள் காரை துரத்திச் சென்று 15 கிலோமீட்டர் தூரத்தில் மடக்கி பிடித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், சோழசமுத்திரத்தை சேர்ந்தவர் ஜென்னி எரிசாமி (வயது 35). மெக்கானிக். இவர் நேற்று இரவு சோழ சமுத்திரத்திலிருந்து தனது பைக்கில் வந்தார்.
பெலுகுப்பா தேசிய நெடுஞ்சாலையில் அனந்தபூர் நோக்கி சென்றார். ஹனிமி ரெட்டி பள்ளி என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த கார் ஜென்னி எரிசாமி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் காரின் பின்பகுதியில் உள்ள பம்பரில் சிக்கிக்கொண்டார்.
இதனை கவனிக்காத கார் டிரைவர் காரை தொடர்ந்து ஓட்டிச் சென்றார். படுகாயமடைந்த ஜென்னி எரிசாமி துடிதுடித்து இறந்தார்.
காரின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் காரின் பம்பரில் சிக்கிக்கொண்டு ஒருவர் இழுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வாகன ஓட்டிகள் காரை துரத்திச் சென்று 15 கிலோமீட்டர் தூரத்தில் மடக்கி பிடித்தனர். அப்போது காரை ஓட்டி வந்த டிரைவர் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரில் சிக்கி இருந்த வாலிபர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டிவந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.