இந்தியா

ஐசிஐசிஐ-வீடியோகான் மோசடி வழக்கு: கோச்சார் தம்பதிக்கு ஜாமின்

Published On 2024-02-06 11:18 GMT   |   Update On 2024-02-06 11:18 GMT
  • சந்தா கோச்சார் ஐசிஐசிஐ தலைமை பொறுப்பிலிருந்து பதவி விலகினார்
  • கோச்சார் தம்பதி மற்றும் 6 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது

1979ல், மும்பையில் வேணுகோபால் தூத் என்பவரால் தொடங்கப்பட்டு பன்னாட்டு நிறுவனமாக வளர்ச்சி பெற்றது வீடியோகான் குழுமம் (Videocon group).

2009 ஜூன் மாதத்திலிருந்து 2011 அக்டோபர் காலகட்டம் வரை, வீடியோகான் குழுமத்திற்கு, ஐசிஐசிஐ தனியார் வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சந்தா கோச்சார் (Chanda Kochhar) , தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, நிறுவனர் வேணுகோபால் தூத்திற்கு ரூ.3,250 கோடி கடனாக வழங்கியதாகவும், தகுதியற்ற கடன் வழங்கியதற்கு ஈடாக சந்தாவின் கணவர் தீபக் கோச்சாருக்கு வீடியோகான் லஞ்சம் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து சந்தா கோச்சார் வங்கியின் உயர் பதவியிலிருந்து விலகினார்.

இதை விசாரித்த மத்திய புலனாய்வு துறை (CBI) 2023 ஏப்ரல் மாதம், சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சார், மற்றும் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்தது.

2022 டிசம்பர் 23 அன்று சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டனர். 3 நாட்கள் கடந்து வேணுகோபால் தூத் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

இந்நிலையில், இன்று சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட போது விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என நம்ப இடமிருப்பதாகவும், அவரது கைது சட்டவிரோதம் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோச்சார் தம்பதியினருக்கு இடைக்கால ஜாமீனையும் நீதிமன்றம் வழங்கியது.

Tags:    

Similar News