பிளாக் மேஜிக்கால் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது... காங்கிரசை விமர்சித்த பிரதமர் மோடி
- பானிபட்டில் 2ஜி எத்தனால் ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- இலவசங்கள் வழங்கும் அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி தாக்கினார்
பானிபட்:
விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கடந்த 5ம் தேதி கருப்புச் சட்டை அணிந்து பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். இதனை கிண்டலடிக்கும் வகையில், பிரதமர் மோடி இன்றைய நிகழ்ச்சியில் பேசினார்.
அரியானா மாநிலம் பானிபட்டில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் 2ஜி எத்தனால் ஆலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பேசியதாவது:-
இலவசங்கள் வழங்கும் அரசியலில் ஈடுபடும் சில எதிர்க்கட்சிகள், புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதை தடுக்கும் வகையில் செயல்படுகின்றன.
ஆகஸ்ட் 5-ம் தேதி சிலர் 'பிளாக் மேஜிக்' செய்ய முயன்றதைப் பார்த்தோம். கருப்பு ஆடை அணிவதன் மூலம் சிக்கலை போக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மாந்திரீகம், சூனியம், மூடநம்பிக்கை போன்றவற்றில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.