அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை பூஜை தொடங்கியது
- குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான விழா இன்று ஆகமவிதிகள்படி தொடங்கியது.
- குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 7 நாள் பூஜையின் தொடக்க நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு கருவறையில் பூஜைகள் நடந்தன.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 71 ஏக்கரில் அமையும் இந்த ஆலயம் நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
3 அடுக்குகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் முதல் தளத்தில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 சிற்பிகள் குழந்தை ராமர் சிலையை வடிவமைத்துள்ளனர்.
51 இஞ்ச் உயரம் கொண்ட குழந்தை ராமர் சிலை கருவறையில் வருகிற 22-ந்தேதி மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கான சிறப்பு பூஜைகளை செய்ய உள்ளார். விழாவில் சுமார் 7 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் குழந்தை ராமர் சிலைக்காக 3 சிற்பிகள் செய்த சிலைகளில் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய குழந்தை ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத்ராய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான விழா இன்று (செவ்வாய்க்கிழமை) ஆகமவிதிகள்படி தொடங்கியது. இதையொட்டி அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று முதல் 7 நாட்களுக்கு ஐதீகப்படி பூஜைகள் நடைபெறும்.
இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு என்னென்ன பூஜைகள் மேற்கொள்ளப்படும் என்ற விவரத்தை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 7 நாள் பூஜையின் தொடக்க நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு கருவறையில் பூஜைகள் நடந்தன. அங்கு முதல் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
இதையடுத்து புனித நீராடல் மேற்கொள்ளப்படும். இதற்காக அயோத்தி நகரில் உள்ள சரயு நதிக்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பசுக்கள் தானம் செய்யப்பட்டு பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து விஷ்ணு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு பிராயசித்த பூஜைகள் முறைப்படி நடத்தப்பட்டது.
நாளை (புதன்கிழமை) குழந்தை ராமர் சிலை அயோத்திக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும். அதே சமயத்தில் சரயு நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலசங்களில் புனித நீர் எடுத்துக்கொண்டு அயோத்தி ஆலயத்துக்கு வருவார்கள்.
அந்த புனித நீர் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பயன்படுத்தப்படும்.
18-ந்தேதி (வியாழக்கிழமை) யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது. விநாயகர் பூஜையுடன் யாக சாலைகளில் சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டு பூஜைகள் செய்யப்படும். வருண பூஜை, வாஸ்து பூஜைகள் அடுத்தடுத்து நடைபெறும்.
அதற்கு அடுத்த நாள் (19-ந்தேதி) யாக சாலை பூஜைகள் தொடர்ந்து நடத்தப்படும். நவக்கிரக பூஜைகள் ஆகமவிதிகளின்படி மேற்கொள்ளப்படும். இதில் ஆயிரக்கணக்கான வேத விற்பன்னர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக அயோத்தி ராமர் கோவில் அருகே மிக பிரமாண்டமாக குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
20-ந்தேதி (சனிக்கிழமை) அயோத்தி ராமர் கோவிலை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். யாக சாலை பூஜைகளில் குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். சரயு நதியில் இருந்து எடுத்து வரப்படும் புனித நீரால் ஆலயம் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.
அதன் பிறகு வாஸ்து சாந்தி பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகள் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமை (21-ந்தேதி) முழுக்க முழுக்க குழந்தை ராமர் சிலை 125 வகை அபிஷேகங்களால் புனித நீராடல் செய்யப்படும்.
இதையடுத்து அயோத்தி ஆலயத்தில் முக்கிய நிகழ்வான குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா 22-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும். அன்று மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் குழந்தை ராமர் சிலையை ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்வார்கள். இந்த பூஜையை வாரணாசியில் இருந்து வரும் வேதவிற்பன்னர்கள் கண்காணிப்பார்கள்.
குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும்போது 121 ஆச்சார்யார்கள் வேத மந்திரங்களை முழங்குவார்கள்.
பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலைக்கு முக்கிய பூஜைகள் செய்வார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இருப்பார்கள்.
விழாவில் 150 நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவுக்கு அழைக்கப்பட்டு உள்ள சுமார் 7 ஆயிரம் பேரில் சுமார் 3 ஆயிரம் பேர் சாதுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு 21 மற்றும் 22-ந்தேதிகளில் பக்தர்கள் யாரும் ராமர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பக்தர்கள் அயோத்தி கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.