null
அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு
- டாடா குழுமம் தனி குழுவை உருவாக்கி விசாரணை நடத்தி வருகிறது.
- சுமார் 52 பேரின் கருகிய உடல்கள் யாருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் லண்டனுக்கு புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் விஷ்வாஸ் என்ற பயணி தவிர விமானத்தில் இருந்து 241 பேர் உடல் கருகி பலி யானார்கள். மேலும் விமானம் வெடித்து சிதறியதால் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது.
கல்லூரி வளாகத்தில் இருந்த ஏராளமானவர்கள் இந்த கோர விபத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 33 பேர் பலியாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இதனால் அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்து இருக்கிறது.
இதற்கிடையே அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்களில் சிலரை கடந்த 2 நாட்களாக காணவில்லை. அவர்கள் பற்றிய தகவல்களையும் சேகரிக்க இயலவில்லை. அவர்கள் விமான விபத்தில் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் விமான விபத்து பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது. விபத்து நடந்த பகுதியில் ஏற்கனவே விமான போக்குவரத்து விசாரணை குழுவினர் ஆய்வை தொடங்கி உள்ளனர். குஜராத் மாநில போலீசாரும் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டாடா குழுமமும் தனி குழுவை உருவாக்கி விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உயர்மட்ட விசாரணை குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த குழுவினரும் தீவிர விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த உயர்மட்ட குழு அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் தீவிர ஆய்வை மேற்கொள்ளும். அதோடு விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து அறிக்கையாக தயார் செய்து அதை மத்திய அரசுக்கு வழங்கும். இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இத்தகைய விபத்துக்களை தடுக்க உயர்மட்ட குழு விசாரணை பரிந்துரை உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் இந்த உயர்மட்ட குழு தயாரித்து கொடுக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் பல்வேறு விமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய விமான போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விமான விபத்தில் கருகிய நிலையில் மீட்கப்பட்டவர்களின் உடல்கள் டி.என்.ஏ. மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் சுமார் 52 பேரின் கருகிய உடல்கள் யாருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
மற்ற உடல்களையும் அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உடல்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு 72 மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.