இந்தியா

கர்நாடகா அரசு பஸ்-பைக் மோதல்: உடல் கருகி 2 பேர் பலி

Published On 2023-01-08 09:30 GMT   |   Update On 2023-01-08 09:30 GMT
  • பஸ்சில் தீ கொளுந்து விட்டு எரிவதால் பயணிகள் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே குதித்து தப்பினர்.
  • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி பற்றி எரிந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

கிருஷ்ணகிரி:

பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை நோக்கி கர்நாடகா அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

இந்த பஸ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி அருகே இன்று மதியம் வந்தபோது தேசிய நெடுஞ்சாலை குறுக்கே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கடக்க முயன்றனர்.

அப்போது கர்நாடகா அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பைக்கின் பெட்ரோல் டேங்க்கில் மோதியதால் வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த 2 பேரும் உடல் கருகி இறந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்சும் தீ குபுகுபுவென பற்றி எரிந்தது. இதனை பார்த்த பயணிகள் அலறினர். பஸ்சில் தீ கொளுந்து விட்டு எரிவதால் பயணிகள் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே குதித்து தப்பினர்.

இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். இந்த விபத்தால் சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி பற்றி எரிந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை சரிசெய்து சீரமைத்தனர்.

இந்த தீ விபத்தில் இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News