பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: உடன் படிக்கும் 2 மாணவர்கள் கைது
- பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடூமையை கூறி கதறி அழுதுள்ளாள்.
- பெற்றோர் மாட்டுங்கா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர்.
மும்பை :
மும்பை மாட்டுங்கா பகுதியில் மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. எனவே சிறுமியின் தாய் அவளிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது சிறுமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டாள்.
கடந்த திங்கட்கிழமை சிறுமியுடன் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆண்டு விழா நடன நிகழ்ச்சி ஒத்திகைக்காக வெளியே சென்று இருந்தனர். வகுப்பறையில் இந்த மாணவி தனியாக இருந்து உள்ளாள். இந்த சந்தர்ப்பத்தில் சிறுமியுடன் 8-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அங்கு வந்து உள்ளனர்.
அந்த மாணவர்கள் 2 பேரும் வகுப்பறையில் தனியாக இருந்த மாணவியிடம் அத்துமீறினர். மேலும் அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் சம்பவம் குறித்து வெளியே சொன்னால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்கூறி மிரட்டி சென்றுள்ளனர்.
இதனால் பயந்துபோன சிறுமி நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளாள். உடல்நல பாதிப்பை தொடர்ந்து பெற்றோர் கேட்டபோது தான், தனக்கு நேர்ந்த கொடூமையை கூறி கதறி அழுதுள்ளாள்.
தங்களது மகள் கூறிய தகவல் பெற்றோரின் தலையில் இடியாக விழுந்தது. அவர்கள் நொறுங்கி போனார்கள்.
பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்ட தங்களது மகளுடன் மாட்டுங்கா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை பலாத்காரம் செய்த 2 மாணவர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கூட்டு பலாத்காரம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு டோங்கிரியில் உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.
மும்பையில் பள்ளி வகுப்பறையிலேயே மாணவி ஒருவர், உடன் படிக்கும் மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.