இந்தியா
பாஜக

மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு 100 உறுப்பினர்கள்... 1990-க்கு பிறகு உச்சம் தொட்ட முதல் கட்சி

Published On 2022-04-01 12:13 GMT   |   Update On 2022-04-01 14:43 GMT
2014-க்கு பிறகு பாஜக பல மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியதால் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

பஞ்சாப், அசாம், திரிபுரா, நாகாலாந்து, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட6 மாநிலங்களில் காலியாகும் 13 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. 

இதில், நாகாலாந்து, இமாச்சல பிரதேசத்தில் தலா ஒரு உறுப்பினர் பதவியை போட்டியின்றி  பாஜக கைப்பற்றியது. நேற்று நடந்த தேர்தலில், அசாமில் 2 உறுப்பினர், திரிபுராவில் ஒரு உறுப்பினர் பதவியை வென்றது. இதனால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 1990க்கு பிறகு 100 உறுப்பினர்களை கடந்த முதல் கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது.

245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை குறைவாக இருந்தாலும், 2014 தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மக்களவையில் பெரும்பான்மை பெற்றதில் இருந்து, மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 2014-ல் 55 ஆக இருந்தது. அதன்பின்னர் பல மாநிலங்களில் அக்கட்சி ஆட்சியை கைப்பற்றியதால் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்துள்ளது.

கடைசியாக 1990 ஆம் ஆண்டில் ஆளும் காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவையில் 100 உறுப்பினர்கள் என்ற மைல்கல்லை கடந்து, 108 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. ஆனால், அந்த ஆண்டில் நடந்த தேர்தலில் காங்கிரசின் பலம் 99 ஆக குறைந்தது. அதன்பிறகு 2014 வரை தொடர்ந்து சரிந்தது.
Tags:    

Similar News