இந்தியா
நிதின் கட்காரி

அமெரிக்க சாலைகள் போல் இந்திய சாலைகள் மாறும்- நிதின் கட்காரி உறுதி

Published On 2022-03-23 08:28 IST   |   Update On 2022-03-23 08:28:00 IST
சாலைகள் அமைக்கும்போது மரங்களை வெட்டக்கூடாது என்பதற்காக, மரங்களை பிடுங்கி, வேறு இடங்களில் நடுவதற்காக ஆயிரம் விசேஷ ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று நிதின் கட்காரி கூறினார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நமது சாலைகளும், நமது வளமையும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை. இந்திய சாலைகள் 2024-ம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க சாலைகள் போல் நன்றாக இருக்கும் என்று இந்த சபை மூலம் உறுதி அளிக்கிறேன்.

டெல்லியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ரூ.62 ஆயிரம் கோடி மதிப்புள்ள சாலை திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

முன்பெல்லாம் டெல்லி விமான நிலையத்துக்கு செல்லும்போதும், திரும்பி வரும்போதும் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வேன்.

ரிங்ரோடு உள்ளிட்ட சாலைகள் மூலம் அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு பிரச்சினைக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

காஷ்மீரில் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்ரீநகரில் இருந்து 20 மணி நேரத்தில் மும்பையை அடைந்து விடலாம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் டெல்லியில் இருந்து 12 மணி நேரத்தில் மும்பையை அடைந்து விடலாம்.

சாலைகள் அமைக்கும்போது மரங்களை வெட்டக்கூடாது என்பதற்காக, மரங்களை பிடுங்கி, வேறு இடங்களில் நடுவதற்காக ஆயிரம் விசேஷ ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலக அளவிலான விபத்துகளில் 11 சதவீத விபத்துகள் இந்தியாவில் நடக்கின்றன. எனவே, விபத்துகள் நடக்காத வகையில் சாலைகளை அமைத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News