இந்தியா
பாட்டியாலா தொகுதியில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தோல்வி
இரண்டு முறை முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தார்.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், மதிய நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 91 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த கட்சியின் 17 வேட்பாளர்கள் மட்டுமே முன்னிலையில் இருந்தனர். முன்னணி வேட்பாளர்கள் பலர் தொடர்ந்து பின்தங்கி உள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், தான் போட்டியிட்ட பாட்டியாலா நகர தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். இரண்டு முறை முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தார். ஆனால், அவரை ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித் பால் சிங் கோலி தோற்கடித்துள்ளார்.
முந்தைய தேர்தலில் அமரீந்தர் சிங், 49 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.