இந்தியா
நான் உலகின் இனிமையான தீவிரவாதி: அரவிந்த் கெஜ்ரிவால்
ஒரு சுதந்திர தேசத்தின் பிரதமராவேன் என்று கெஜ்ரிவால் கூறியதாக வெளியான குற்றச்சாட்டுக்கு, தான் இனிமையான தீவிரவாதி என பதில் அளித்துள்ளார் கெஜ்ரிவால்.
பஞ்சாப் மாநிலத்தில் நாளை மறுதினம் (20-ந்தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜனதா இடையே கடுமையான போட்டி பிரசாரம் நிலவி வருகிறது.
மூன்று கட்சித் தலைவர்களும் ஒருவருக்கொருவர் மாறிமாறி விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவர் குமார் விஷ்வாஸ் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில், கெஜ்ரிவால் ஒரு சுதந்திர தேசத்தின் பிரதமர் ஆகப்போவதாக தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
இதை வைத்துக்கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளிக்கையில், ‘‘அவர்கள் எனக்கு எதிராக கும்பலாக திரும்பியுள்ளனர். அவர்கள் என்னை தீவிரவாதி என்று அழைத்து வருகிறார்கள். இது காமெடி. இது சிரிக்கக் கூடிய விசயம். அப்படி என்றால், ஏன் மோடி என்னை கைது செய்யவில்லை?.
பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், மின்சாரம், சாலைகள், குடிநீர் வழங்கி வரும் உலகின் இனிமையான தீவிரவாதி நான்” என்றார்.
இதையும் படியுங்கள்... அவர் என்னை காலா என்று அழைக்கிறார்- சரண்ஜித் சிங் சன்னி குறித்து கெஜ்ரிவால் புகார்