செய்திகள்
மத்திய அரசின் அவசர சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல்
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகளை மீறி இந்த அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசர சட்டங்களை பிறப்பித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இந்நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அவசர சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:-
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை மீறி இந்த அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளின் தெளிவான அதிகார துஷ்பிரயோகத்தை சட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. எனவே, இந்த சட்டங்களை செயல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இந்த அவசர சட்டங்கள், புலனாய்வு முகமைகளின் மீதான நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அவற்றின் சுயாதீன செயல்பாட்டிற்கு விரோதமானது. பாராளுமன்றம் கூடுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக இந்த அவசரச் சட்டங்களை வெளியிடுவதற்கான எந்த அடிப்படை காரணங்களும் இல்லை.
இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி உள்ளார்.
இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மோகுவா மொய்த்ராவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்... தமிழக, ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும்- மீனவர்கள் செல்ல வேண்டாம்