செய்திகள்
குமாரசாமி

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க கடைசியாக போராடுகிறேன்: குமாரசாமி

Published On 2021-11-08 02:57 GMT   |   Update On 2021-11-08 02:57 GMT
எனக்கு 5 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை வழங்கினால், விவசாயிகள் ஒரு ரூபாய் கூட கடன் வாங்காத நிலையை ஏற்படுத்துவேன் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் உற்பத்தி ஆகும் கழிவுநீரை கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களுக்கு அனுப்புகிறார்கள். இதன் மூலம் அந்த மக்களுக்கு இந்த அரசு விஷம் கொடுக்கிறது. சித்தராமையா இருந்தபோது ரூ.16 ஆயிரம் கோடியில் எத்தினஒலே குடிநீர் திட்டத்தை தொடங்கினார். ஒரே ஆண்டில் பணிகளை முடித்து எத்தினஒலே குடிநீர் திட்டத்தில் நீரை கொண்டு வருவதாக கூறினார். அதன் பிறகு பல முதல்-மந்திரிகள் வந்து சென்றுவிட்டனர். இப்போது பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி பதவியில் அமர்ந்துள்ளார்.

எத்தினஒலே குடிநீர் திட்டத்தின் மதிப்பீடு இன்று ரூ.24 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அந்த திட்டத்திற்கான நீர் இன்னும் சக்லேஷ்புராவை தாண்டவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது ரூ.25 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். நான் கிராமம், கிராமமாக சென்று ஜனதா தளம்(எஸ்) கட்சியை பலப்படுத்த முடிவு செய்துள்ளேன்.

எனக்கு 5 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை வழங்கினால், விவசாயிகள் ஒரு ரூபாய் கூட கடன் வாங்காத நிலையை ஏற்படுத்துவேன். ஆட்சியை பிடிக்க நான் கடைசியாக போராடுகிறேன். மக்கள் எங்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை நடத்துவேன். விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News