செய்திகள்
பிரதமர் மோடி ஆலோசனை

48 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை- வீடு வீடாக தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

Published On 2021-11-03 08:49 GMT   |   Update On 2021-11-03 11:55 GMT
குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க புதுமையான வழிகளை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. 3-வது அலை வராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

சமீபத்தில் 100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை அடைந்து இந்தியா புதிய சாதனை படைத்தது. இதுவரை 107 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. விரைவில் 100 சதவீத மக்களுக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.



இந்த நிலையில் சில மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவிலேயே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மராட்டியம், நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 48 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு 50 சதவீதத்துக்கு குறைவாகவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2-வது டோஸ் தடுப்பூசியும் குறைந்த அளவிலேயே போடப்பட்டு இருப்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

நாகாலாந்தில் உள்ள கிபிரே மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 16.1 சதவீதம் பேருக்கே முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அவுரங்காபாத்தில் (மராட்டியம்) 46.5 சதவீதமும், தியோகரில் (ஜார்க்கண்ட்) 44.2 சதவீதமும் போடப்பட்டுள்ளது. இது மாதிரி 48 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கு குறைவான அளவில் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 48 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.  காணொலி வாயிலாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர்களும், அந்தந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக்  கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க புதுமையான வழிகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களை கேட்டுக்கொண்டார். 

“கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வைப் பரப்பவும், வதந்திகளை எதிர்த்துப் போராடவும் உள்ளூர் மதத் தலைவர்களின் உதவியைப் பெறலாம். இதுவரை தடுப்பூசி மையங்களுக்கு மக்களை அழைத்து வந்து தடுப்பூசி போடப்பட்டது. இப்போது வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுவதற்கான நேரம் வந்துவிட்டது.  தடுப்பூசி போடாதவர்களுக்கு முதல் டோஸ் செலுத்துவதை உறுதி செய்யுங்கள். அதே கவனத்தை 2வது டோஸ் செலுத்துவதிலும் செலுத்துங்கள்” என பிரதமர் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News