செய்திகள்
அமிதாப், அபிஷேக் பச்சன்

அமிதாப், அபிஷேக் பச்சன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் - மருத்துவமனை தகவல்

Published On 2020-07-18 17:57 IST   |   Update On 2020-07-18 17:57:00 IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரின் சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்தி திரையுலகில் பிரபல நடிகரான அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 11ந்தேதி உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த பரிசோதனையின் முடிவில் அபிஷேக் பச்சனின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. எனினும் ஜெயா பச்சனுக்கு பாதிப்பு இல்லை என மகாராஷ்டிர சுகாதாரத்துறை மந்திரி உறுதிபடுத்தினார்

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் ஆரத்யா ஆகிய இருவரின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் இன்னும் ஓரிரு நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் ஐஸ்வர்யா ராய்க்கு இருமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Similar News