பாட்னாவில் சத்ருகன்சின்கா தொகுதியில் அமித்ஷா ரோடு ஷோ- காங்கிரஸ் கண்டனம்
பாட்னா:
நடிகர் சத்ருகன்சின்கா காங்கிரஸ் வேட்பாளராக பாட்னா ஷாகில் தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜனதாவில் இருந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். பாட்னா தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.
மே 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கும் அத்தொகுதியில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று பாட்னா தொகுதியில் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் செய்கிறார். அப்போது சத்ருகன்சின்கா வீடு வழியாக அமித்ஷாவின் ரோடு ஷோ செல்கிறது.
இதை கண்டித்துள்ள காங்கிரஸ் இது மலிவான அரசியல் என்று விமர்சித்துள்ளது. ஆனால் பா.ஜனதா தரப்பில் கூறும்போது ரோடு ஷோ தனிப்பட்ட நபருக்கு எதிராக நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சத்ருகன் சின்கா கூறியதாவது:-
அமித்ஷா இங்கு தாராளமாக வரலாம். சில பேர் சொல்கிறார்கள் அமித்ஷா இங்கு தனது பலத்தை என்னிடம் காட்ட வருகிறார் என்று கூறுகிறார்கள்.
இந்த தேசம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. அவர்கள் நல்ல மனதுடன் வந்தால் வரவேற்கப்படுவார்கள். அவர்களுக்கு தேநீர், பக்கோடா கூட வழங்கப்படும். மேலும் அவர்களிடம் பொதுமக்கள் கேள்விகளையும் கேட்பார்கள். அவர்கள் தங்களது பலத்தை காட்டுவதற்காக வருகிறார்கள் என்றால் நான் சொல்கிறேன். அவர்களுக்கு பீகார் குடும்பம் தங்களது பலத்தை காட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.