செய்திகள்

முதல் 3 கட்ட தேர்தலில் காங்கிரஸ் முந்துகிறது - ப.சிதம்பரம்

Published On 2019-04-28 06:29 GMT   |   Update On 2019-04-28 06:29 GMT
ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு காரணமாக பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும் முதல் 3 கட்ட தேர்தலில் காங்கிரஸ் முந்துகிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். #PChidambaram

மும்பை:

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 11-ந்தேதி, 18-ந் தேதி, 23-ந்தேதிகளில் 3 கட்டங்களாக 303 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் பிரதமர் மோடி பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுகையில், “பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 50 இடங்களில் கூட வெற்றி பெறாது” என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒருவர் கனவு காண்பதை யாராலும் தடுக்க முடியாது. பிரதமர் மோடி தூக்கத்தில் மட்டும் அல்லாது விழித்துக் கொண்டிருக்கும்போது கனவு காண்கிறார். எந்த பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை. நான் இதை தைரியமாக கூறுகிறேன். நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலிலும் பா.ஜனதாவை விட காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அதிக வாக்கு பெற்றுள்ளன. காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.

 


இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தேசியவாதம் பற்றி மோடி பேசுகிறார். கடந்த 1947, 1964, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த போர்களில் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. நம்மிடம் உள்ள வலுவான பாதுகாப்பு படையே அதற்கு காரணம். ஒரு தனி மனிதர் அல்ல.

ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு காரணமாக பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். பணக்காரர்களின் கருப்பு பணத்தை மாற்றுவதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்களுக்காக இல்லை.

தேர்தல் கமி‌ஷன் பாரபட்சமாக செயல்படுகிறது. பிரதமர் மோடி செல்லும் ஒவ்வொரு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கும் ரூ.10 கோடிக்கும் மேல் செலவிடப்படுகிறது. இது குறித்து தேர்தல் கமி‌ஷன் கேள்வி எழுப்பவில்லை. மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் தயக்கம் காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #PChidambaram

Tags:    

Similar News