செய்திகள்

தேர்தல் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து பாஜக எம்எல்ஏ அப்பீல்- திங்கட்கிழமை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

Published On 2019-04-15 08:18 GMT   |   Update On 2019-04-15 08:18 GMT
தேர்தல் வெற்றி செல்லாது என குஜராத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பாஜக எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை விசாரிக்க உள்ளது. #GujratBJPMLA #CourtTerminatesMLA
புதுடெல்லி:

குஜராத் மாநிலம் துவாரகா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாபுபா மானக். இவரது வெற்றியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் மீராமன் ஆகிர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், பாஜக வேட்பாளர் மானக், குறைபாடுள்ள வேட்பு மனுவை தாக்கல் செய்ததாகவும், அதனால் அவரது  வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், துவாரகா எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என 12ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, இந்த தீர்ப்பிற்கு 4 வாரங்கள் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மானக்கின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.


இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து பாபுபா மானக், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அடுத்த திங்கட்கிழமை விசாரணையை தொடங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். #GujratBJPMLA #CourtTerminatesMLA 
Tags:    

Similar News