செய்திகள்

ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்

Published On 2019-04-11 09:09 GMT   |   Update On 2019-04-11 09:09 GMT
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SoniaGandhi
ரேபரேலி:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, உத்தரபிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் 5வது முறையாக போட்டியிட உள்ளார். இந்த தொகுதியில் வரும் மே 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



இதற்காக இன்று ரேபரேலி தொகுதியை  அடைந்த சோனியா காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் காரில் ஊர்வலமாக புறப்பட்டார்.  காரில் சென்ற சோனியாவிற்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற வேண்டி, இன்று காலை பூஜை நடத்தினார். அப்போது சோனியா காந்தியுடன் அவரது மகள் மற்றும் உத்தரபிரதேசம் மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா, மற்றும் மகன் ராகுல் காந்தியும் உடன் இருந்தனர்.

இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தி, இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது ராகுல் காந்தி , பிரியங்கா ஆகியோர் உடன் இருந்தனர். சோனியா காந்தி போட்டியிடுவதை முன்னிட்டு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் அந்த தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #SoniaGandhi   
Tags:    

Similar News