செய்திகள்
இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்கள் எதிர்க்கட்சிகள் - மோடி குற்றச்சாட்டு
அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்கள் என குற்றம்சாட்டினார். #LSpolls2019 #PMModi
இடாநகர்:
அருணாசலப்பிரதேசத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் ஆலோ பகுதியில் பாஜகசார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பா.ஜ.க.வின் முயற்சியால் அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. முந்தைய அரசுகள் வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்து வந்தன. ஆனால், நாங்கள் வடகிழக்கு மாநிலங்களை புறக்கணிக்கவில்லை.
நானும், மற்ற மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து இங்கு வந்து கொண்டிருப்பதால் டெல்லியுடன் வடகிழக்கிற்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்கள் எதிர்க்கட்சிகள். நம் நாடு சாதனை புரிந்தால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் தானே? ஆனால் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி கட்சிகள் இந்தியாவின் வளர்ச்சியையும், வெற்றியையும் பாராட்ட மனமில்லாதவர்களாக உள்ளனர்.
குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர துடிப்பவர்களை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஊழலில் பசை போட்டு ஒட்டி அடித்தளம் அமைத்து உருவாக்கப்பட்டது தான் மெகா கூட்டணி. இந்தியாவின் சாதனைகளால் எஜமானர்கள் வருத்தம் அடைந்துள்ளதுடன், சந்தேகமும் கொண்டுள்ளனர்.
பயங்கரவாதிகளை அவர்களது வீட்டிலேயே நுழைந்து இந்தியா தாக்கியது. இதற்கு எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை எப்படி இருந்தது என்பதை நீங்கள் கண்டீர்கள் தானே? எனவே வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு தகுந்த தண்டனையை நீங்கள் தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #LSpolls2019 #PMModi