செய்திகள்
காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பிரியங்கா காந்தி
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பிரியங்கா காந்தி. #PriyankaGandhi #KashiVishwanathtemple
லக்னோ:
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரியங்காவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மிகவும் பலவீனமாக உள்ள இந்த 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பொறுப்பு பிரியங்காவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்வதை தவிர்த்து விட்டு இந்த 42 தொகுதிகளிலும் பிரியங்கா அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.
முதல் கட்டமாக அவர் நேற்று முன்தினம் உத்தரபிரதேசத்தில் கங்கையில் படகு பிரசாரத்தை தொடங்கினார். பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மனையா காட்டில் இருந்து அவர் படகு பயணத்தை தொடங்கினார். மொத்தம் 3 நாட்கள் படகில் சென்று வாரணாசியை சென்றடைகிறார்.
பிரியங்கா காந்தி மேற்கொண்டுள்ள படகு பயணத்தின் இறுதி நாளான இன்று வாரணாசிக்கு சென்றார். அங்குள்ள ராம் நகரில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி வீட்டுக்கு சென்றார். அங்குள்ள லால்பகதூர் சாஸ்திரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு காசி விஸ்வநாதரை வழிபட்டு தரிசனம் செய்தார். #PriyankaGandhi #KashiVishwanathtemple