செய்திகள்
கோப்புப்படம்

வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் - ராஜ்நாத் சிங்குடன் உமர் அப்துல்லா சந்திப்பு

Published On 2019-02-16 14:13 GMT   |   Update On 2019-02-16 14:13 GMT
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகளின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக ராஜ்நாத் சிங்குடன் உமர் அப்துல்லா ஆலோசித்தார்.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் மிரட்டப்படுவதாகவும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாவது சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்கள் மூலம் தகவல் பரவி வருகிறது.

குறிப்பாக, உத்தரகாண்ட மாநிலத்தில் தங்கி படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் உடனடியாக தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு உரிமையாளர்களால் மிரட்டப்படுவதாக செய்திகள் வெளியாகின.

இதுபோன்ற அசம்பாவிதங்கள் மற்ற பகுதிகளில் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதிக அக்கறைகாட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா இன்று மாலை டெல்லி வந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். பிற மாநிலங்களில் உள்ள  காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகளின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக ராஜ்நாத் சிங்குடன் உமர் அப்துல்லா சுமார் 30 நிமிடங்கள் ஆலோசித்தார்.



தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக சந்திக்க நேரம் ஒதுக்கித்தந்த ராஜ்நாத் சிங்குக்கு நன்றி தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, காஷ்மீர் மாணவர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துகளை கவனமாக கேட்டறிந்த ராஜ்நாத் சிங், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். #OmarmeetsRajnath #safetyofKashmiristudents #Kashmiristudents #PulwamaAttack
Tags:    

Similar News