செய்திகள்

கா‌ஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்

Published On 2019-02-11 04:48 GMT   |   Update On 2019-02-11 04:48 GMT
ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மீட்ட ராணுவ வீரர்கள் சுமார் 2½ கி.மீ சுமந்து சென்று காப்பாற்றினர். #Pregnantwoman #Snowfall
ஜம்மு:

கா‌ஷ்மீரில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த நிலையில் வடக்கு கா‌ஷ்மீர் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடிப்பதாகவும், அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உதவும்படியும் பந்திபூர் ராணுவ முகாமுக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.

இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் மூலம் அந்த கிராமத்துக்கு விரைந்தனர். ஆனால் சாலைகள் முழுவதும் பனித்துகள்களால் மூடப்பட்டு இருந்ததால் ஆம்புலன்சை வீட்டின் அருகே கொண்டு செல்ல முடியவில்லை. எனினும் மனம் தளர்ந்துவிடாத வீரர்கள், அந்த பெண்ணை தூக்குப்படுக்கையில் சுமார் 2½ கி.மீ தூரத்துக்கு இடுப்பளவு பனித்துகள்களுக்கு மத்தியிலும் சுமந்து சென்றனர்.

பின்பு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. தக்க நேரத்தில் உதவி புரிந்த ராணுவ வீரர்களுக்கு அந்த பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். #Pregnantwoman #Snowfall
Tags:    

Similar News