செய்திகள்

கடந்த ஆண்டில் ஜம்முவுக்கு 1½ கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை

Published On 2019-02-09 03:38 GMT   |   Update On 2019-02-09 03:38 GMT
கடந்த ஆண்டில் ஜம்முவுக்கு 1½ கோடி சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. #Jammu #VaishnoDeviTemple
ஜம்மு:

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் காஷ்மீர் மாநிலம் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. நாட்டின் வடக்கு எல்லையாக உள்ள இமயமலையை ஒட்டி அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த ஜம்மு காஷ்மீரில் பல வழிபாட்டுத்தலங்களும், பள்ளத்தாக்குகளும் உள்ளன.

கோடை காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் காஷ்மீரில் உள்ள ஜம்முவுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இன்றி ஒரு கோடியே 60 லட்சத்து 469 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக காஷ்மீர் மாநில அரசு தெரிவித்து உள்ளது. இது மிகவும் அதிக எண்ணிக்கையாகும்.

ஆனால் அதே சமயம் காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2017-ம் ஆண்டில் 11 லட்சம் பயணிகள் காஷ்மீருக்கு வருகை புரிந்துள்ளனர். ஆனால் 2018-ம் ஆண்டில் 8½ லட்சம் பேர் மட்டுமே காஷ்மீருக்கு சுற்றுலா வந்துள்ளனர்.



இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரி கூறுகையில், ‘ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களை தவிர இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே பயணிகள் ஜம்முவில் தங்கி ஓய்வு எடுக்க விரும்புவதால் இங்கு வருவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

காஷ்மீரில் அடிக்கடி நிகழும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பிரிவினைவாதிகள் நடத்தும் கல் வீச்சு சம்பவங்களும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. சுற்றுலாவை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கழிக்க விரும்புவோர், வன்முறை நடந்தேறும் காஷ்மீரை தேர்ந்தெடுக்க தயங்குகிறார்கள். எனவே இங்கு அமைதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை வேண்டுமென உள்ளூர் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #Jammu #VaishnoDeviTemple
Tags:    

Similar News