செய்திகள்

கொல்கத்தா கமிஷனரை கைது செய்ய கூடாது - சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மம்தா வரவேற்பு

Published On 2019-02-05 09:39 GMT   |   Update On 2019-02-05 10:57 GMT
கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனரை கைது செய்ய கூடாது என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு மகிழ்ச்சியளிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #Mamata #MamatawelcomesSCorder
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.

மேற்கு வங்காளம் அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக சி.பி.ஐ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த  நீதிபதிகள் ‘சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.  

அதேவேளையில், கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் நிர்பந்தமான முறையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அத்துமீறலாக நடந்துகொள்ள கூடாது. அவரை கைது செய்யவும் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் கடந்த மூன்று நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு ஆறாண்டுகளுக்கு முன்னர் இம்மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்தபோது போடப்பட்ட வழக்காகும், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சுதிப்தா சென்-னை கைது செய்து வழக்கு போட்டோம். நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு, பணம் கட்டி ஏமாந்த  முதலீட்டாளர்களுக்கு 300 கோடி ரூபாயை பெற்றுத் தந்திருக்கிறோம். இப்போது இவ்விவகாரத்தில் எங்களை குற்றவாளிகள்போல் சித்தரிக்க மோடி அரசு முயற்சிக்கிறது.

நீதித்துறையின் மீது நாங்கள் மரியாதை வைத்திருக்கிறோம். டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை கைது செய்வதற்காக இங்கு வந்தனர். ஆனால், அவரை கைது செய்ய கூடாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்துள்ள இந்த உத்தரவு எங்களுக்கு கிடைத்த வெற்றி.

இந்த நாட்டில் யாருமே உயர்வான எஜமானர்கள் இல்லை. ஜனநாயகம் மட்டுமே நம் நாட்டின் எஜமானர். நான் கொல்கத்தா கமிஷனருக்காக போராடவில்லை. இந்த நாட்டு மக்கள் அனைவருக்காகவும், நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்படவும், பாதுகாக்கப்படுவதற்காகவும் தான் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.

இவ்விவகாரத்தில் இப்போது எங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. இந்நாட்டின் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Mamata #MamatawelcomesSCorder #democracy #bigbossofIndia

Tags:    

Similar News