செய்திகள்

பா.ஜனதா ரத யாத்திரை: அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம் - உச்சநீதிமன்றம்

Published On 2019-01-15 23:07 GMT   |   Update On 2019-01-15 23:07 GMT
பா.ஜனதா ரத யாத்திரைக்கு அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. #BJP #RathYatra #SupremeCourt
புதுடெல்லி:


மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளில் டிசம்பர் 7 முதல் 14-ம் தேதி வரை பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் ரத யாத்திரையை நடத்த மாநில பா.ஜனதா கட்சி முடிவு செய்தது.

இதற்கு மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பா.ஜனதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ரத யாத்திரைக்கு அனுமதி தர உத்தரவிட்டார். எனினும் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், பா.ஜனதா மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ரத யாத்திரைக்கு அனுமதி கோரி பா.ஜனதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கக் கோரிய பா.ஜனதாவின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பா.ஜனதாவின் ரத யாத்திரையால், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் என, மாநில அரசு கவலை தெரிவித்துள்ளதை ஒதுக்க முடியாது. எனவே, சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில், நியாயமான முறையில், ரத யாத்திரைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News