செய்திகள்

2 இளம்பெண்கள் நுழைந்த விவகாரம் - பரிகார பூஜைக்குப்பின் சபரிமலை நடை திறப்பு

Published On 2019-01-02 06:32 GMT   |   Update On 2019-01-02 06:32 GMT
கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததால் மூடப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலில், பரிகார பூஜைக்குப்பின் மீண்டும் நடை திறக்கப்பட்டது. #SabarimalaTemple #PurificationRituals #SabarimalaProtest
திருவனந்தபுரம்:

சபரிமலையில் இன்று இளம்பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் நுழைவது கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், இளம்பெண்கள் சபரிமலை சன்னிதானம் சென்றால் கோவில் நடையை மூடுவோம் என்றும் ஏற்கனவே பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் தெரிவித்து இருந்தனர்.



இந்த நிலையில் இன்று இளம்பெண்கள் இருவர் சபரிமலை சன்னிதானம் சென்றதை அறிந்ததும் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமாரவர்மா அதிர்ச்சி அடைந்தார்.

இவரைப்போல கோவில் தந்திரிகள், அர்ச்சகர்களும் இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அவர்கள் இதுபற்றி கோவில் மேல்சாந்தி, தலைமை தந்திரி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவில் நடை உடனடியாக அடைக்கப்பட்டது. சாமி தரிசனமும் நிறுத்தப்பட்டது.

இதுபற்றி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமார வர்மா கூறியதாவது:-

சபரிமலை கோவில் சன்னிதானத்தில் இளம்பெண்கள் இருவர் நுழைந்ததாக தகவல் வந்துள்ளது. இதற்காக கோவிலில் பரிகார பூஜை நடத்தப்படும்.

எந்த வயதை சேர்ந்த பெண்கள் வந்தார்கள் என்பதை உறுதிசெய்த பின்பு தந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து பரிகார பூஜை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் ஒரு மணி நேர பரிகார பூஜைக்குப் பின்னர் சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.  #SabarimalaTemple #PurificationRituals #SabarimalaProtest
Tags:    

Similar News