செய்திகள்

மந்திரி பதவியில் இருந்து சித்து விலக வேண்டும் - 4 அமைச்சர்கள் போர்க்கொடி

Published On 2018-12-02 06:50 GMT   |   Update On 2018-12-02 06:50 GMT
பஞ்சாப் முதல்- மந்திரி அமரீந்தர் சிங்கை மறைமுகமாக விமர்சித்த விவகாரத்தில், சித்து உடனடியாக மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று 4 அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனார்.#NavjotSinghSidhu

சண்டிகார்:

பாகிஸ்தானில் நடந்த கர்தார்பூர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து கலந்து கொண்டார். பாகிஸ்தான் அழைப்பை ஏற்று அவர் சென்று வந்தார்.

ஆனால் பஞ்சாப் முதல்- மந்திரி அமரீந்தர்சிங்கோ பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதால் அவர் பாகிஸ்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது முதல்-மந்திரி அமரீந்தர்சிங்கை மறைமுகமாக சித்து தாக்கி விமர்சனம் செய்தார். அவர் கூறும் போது, ‘‘ராகுல்காந்தி தான் எனக்கு கேப்டன். பாகிஸ்தானுக்கு அவர்தான் என்னை அனுப்பினார். கேப்டனுக்கு (அமரீந்தர்சிங்) கேப்டன் ராகுல்காந்தி தான். அவர் ராணுவ கேப்டன்’’ என்றார்.


சித்துவின் இந்த விமர்சனம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போர்க்கொடி எழுந்துள்ளது.

சக மந்திரிகளான சுகிந்தர் சிங் ரன்ட்வா, ராஜிந்தர் பாஜ்வா, சுக்பிந்தர் சிங் சர்காரியா, ரானா குர்மிக்சிங் ஆகிய 4 பேர் சித்துவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஆவார். அதே வேளையில் பஞ்சாபில் கட்சிக்கு அமரீந்தர்சிங்தான் தலைவர். பஞ்சாபில் மீண்டும் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தியது அவர்தான்.

அப்படி இருக்கும் போது தன்னுடைய கேப்டனாக அம்ரீந்தர் சிங்கை சித்து நினைக்கவில்லை என்றால் மந்திரி பதவியில் இருந்து அவர் விலகவேண்டும். அதன்பிறகு ராகுல்காந்தி என்ன வேலை கொடுத்தாலும் செய்யலாம்.

தனது கருத்துக்காக சித்து முதல்-மந்திரி அமரீந்தர் சிங்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை தலைவராக ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #NavjotSinghSidhu

Tags:    

Similar News