செய்திகள்
கஜா புயல் பாதிப்பு - தமிழகத்திற்கு 2வது கட்டமாக ரூ.353 கோடி நிவாரணம் ஒதுக்கீடு
கஜா புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு இரண்டாவது கட்டமாக 353 கோடி ரூபாய் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #GajaCyclone #GajaCycloneRelief
புதுடெல்லி:
கஜா புயல் நாகை அருகே வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதனால் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தன. பாதிப்படைந்த மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, கஜா புயல் பாதிப்படைந்த பகுதிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.
அதன்பின்னர், டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து முதல்கட்ட அறிக்கை அளித்தார்.
கஜா புயல் நிவாரணமாக 15000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை விரைந்து அனுப்புமாறு கோரினார்.
அதைத்தொடர்ந்து, சென்னை வந்த மத்திய குழுவினர் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வறிக்கை மத்திய அரசிடம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு இரண்டாவது கட்டமாக ரூ.353 கோடி நிதியை ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிவாரண தொகையை மாநில பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அளித்துள்ள இடைக்கால அறிக்கையின் படியும், மத்திய குழுவின் ஆய்வறிக்கையின் படியும் இந்த நிதியை ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #GajaCyclone #GajaCycloneRelief