செய்திகள்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச தயார் - கர்நாடகா மந்திரி

Published On 2018-12-01 06:10 GMT   |   Update On 2018-12-01 06:10 GMT
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச தயாராக இருப்பதாக கர்நாடக நீர் பாசன மந்திரி சிவக்குமார் கூறினார். #MekedatuDam #KarnatakaMinister
பெங்களூர்:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் மேலும் ஒரு பிரமாண்ட அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடகா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ரூ.5912 கோடியில் மேகதாது அணையை கட்டி முடிப்பதற்கு வரைவுத் திட்டம் ஒன்றை கர்நாடகா அரசு தயாரித்துள்ளது.

மேகதாது என்ற இடம் ஒகேனக்கல்லுக்கு முன்பாக சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அது அடர்ந்த காட்டுப் பகுதியாகும். அங்கு இயற்கையாக இரு பக்கங்களிலும் அமைந்துள்ள பிரமாண்ட மலைகளுக்கு மத்தியில் காவிரி ஆறு பொங்கி வருகிறது.

அந்த இரு பக்க மலையும் சுமார் 1000 அடி உயரம் கொண்டது. ஒற்றைக்கல் என்று அழைக்கப்படும் அந்த மலைகளுக்கு இடையேதான் புதிய அணையை கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டு விட்டால், தமிழ்நாட்டுக்குள் காவிரி தண்ணீர் சுத்தமாக வராது.

இத்தகைய அபாயத்தை உணர்ந்து தமிழக மக்கள் மேகதாது திட்டத்துக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் வரைவுத் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 22-ந்தேதி திடீரென ஒப்புதல் வழங்கியது. மின்சாரம் தயாரிக்கவே இந்த அணையை கட்டுவதாக கூறி கர்நாடகா அரசு ஒப்புதலை பெற்றுள்ளது.

இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் வரும் 4-ந்தேதி திருச்சியில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

இந்த நிலையில் மேகதாது பகுதியில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது. மனு மீதான விசாரணை முடியும் வரை மேகதாது அணை தொடர்பான எந்த அடுத்தக்கட்ட பணிகளையும் கர்நாடகா அரசு மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி உள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கையால் கர்நாடகா அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழக அரசை சமரசம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் உதவியை நாடவும் கர்நாடக அரசு திட்டமிட்டு இருக்கிறது.

இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகா-தமிழ்நாடு சுமூக தீர்வு ஏற்பட மத்திய அரசு உதவ வேண்டும். இரு மாநில அரசுகளும் இது தொடர்பாக பேச மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசுடன் பேச கர்நாடகா தயாராக இருக்கிறது.

மேகதாது அணை பற்றிய விரிவான திட்ட அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் தயாராகி விடும். அந்த அறிக்கையை தமிழகத்திடம் கொடுக்க விரும்புகிறோம். அதன் அடிப்படையில் இந்த திட்டத்தை பற்றி தமிழக அரசிடம் பேச உள்ளோம். இதற்காக தமிழக அரசிடம் பேச நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய அரசு நீர்வளத் துறை மந்திரியும் இத்தகைய ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து உதவ வேண்டும்.



மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசும், தமிழக அரசும் மோதிக்கொள்ள தேவையில்லை என்று நான் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த திட்டம் பற்றிய விரிவான அறிக்கை வந்ததும் தமிழக அரசு அதை பார்வையிடலாம்.

இந்த திட்டத்தால் கர்நாடக அரசுக்கு பெரிய அளவில் எந்த லாபமும் இல்லை. தமிழக அரசுக்குதான் உண்மையில் லாபமாக இருக்கும்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக பருவ மழை பெய்யும்போது ஏராளமான டி.எம்.சி. தண்ணீர் கடலில்தான் வீணாக சென்று கலக்கிறது. அத்தகைய தண்ணீரை இந்த அணையில் சேமித்து வைத்து பயன்படுத்த முடியும்.

இவ்வாறு கர்நாடக நீர் பாசன மந்திரி சிவக்குமார் கூறினார். #MekedatuDam #KarnatakaMinister


Tags:    

Similar News