செய்திகள்

ரெயில்களில் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து - ரயில்வே அமைச்சகம்

Published On 2018-11-27 15:43 GMT   |   Update On 2018-11-27 15:43 GMT
கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு ரெயில்களில் கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. #GajaCyclone #GajaCycloneReliefMaterials #EdappadiPalaniswami #RailwayMinistry
புதுடெல்லி:

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்  மூலம் நிவாரணப் பொருட்கள் வந்தவண்ணம் உள்ளன. சிலர் நேரடியாக நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்கின்றனர். சிலர் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புகின்றனர்.

இதற்கிடையே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு கடிதம் அனுப்பினார்.  அதில், தமிழகத்திற்கு ரெயில் மூலம் அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 



இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு ரெயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று டிசம்பர் 10-ம் தேதி வரை கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு ரெயில்களில் தமிழகத்திற்குள்ளும் பிற மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. #GajaCyclone #GajaCycloneReliefMaterials #EdappadiPalaniswami #RailwayMinistry
Tags:    

Similar News