தமிழ்நாடு செய்திகள்

வருகிற 15, 16, 17 தேதிகளில் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 3 மணி நேரம் அதிகரிப்பு

Published On 2026-01-12 13:42 IST   |   Update On 2026-01-12 13:42:00 IST
  • தொடர் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
  • கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 5 மணி வரை இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி:

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் ஒரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. அவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

கண்ணாடி பாலம் அமைப்பதற்கு முன்பே, கடல் நடுவில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து வருவார்கள். இந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டபிறகு, படகில் பயணம் செய்ய அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று, பின்பு அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் வகையிலேயே தற்போது இருக்கிறது. இதனால் தற்போது திருவள்ளுவர் சிலைக்கு நேராக படகுகள் இயக்கப்படவில்லை.

விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக படகுகளை இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

அவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை படகில் சென்று பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். அதனை கருத்தில் கொண்டு வருகிற 15-ந் தேதி முதல் 17-ந்தேதி வரையிலான 3 நாட்களும் படகு போக்குவரத்து 3 மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது.

அதன்படி வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கக்கூடிய படகு போக்குவரத்து, இந்த 3 நாட்களும் 2 மணி நேரத்துக்கு முன்னதாக காலை 6 மணிக்கே தொடங்கப்படுகிறது. அதேபோல் மாலையில் வழக்கமாக 4 மணியுடன் நிறுத்தப்படும் படகு போக்குவரத்து, கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 5 மணி வரை இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News