செய்திகள்
கோப்புப்படம்

சபரிமலையில் பக்தர்களிடம் கெடுபிடி- 6 நாட்களில் 63 சதவீத வருமானம் குறைந்தது

Published On 2018-11-24 05:00 GMT   |   Update On 2018-11-24 05:00 GMT
போலீசாரின் கெடுபிடி காரணமாக இந்த முறை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பக்தர்கள் வருகை குறைந்ததால் சபரிமலை கோவில் வருமானமும் குறைந்துள்ளது. #Sabarimala
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த 16-ந்தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் நடத்திய போராட்டம் காரணமாக இந்த முறை சபரிமலையில் வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பலவிதமான கெடுபிடிகளும் விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது.

வழக்கமாக மண்டல பூஜையின்போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து இருமுடி கட்டுடன் அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.

போலீஸ் கெடுபிடி காரணமாக இந்த முறை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பக்தர்கள் வருகை குறைந்ததால் சபரிமலை கோவில் வருமானமும் குறைந்துள்ளது.

கடந்த 6 நாட்களில் கிடைத்த வருமானத்தை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 63 சதவீதம் வருமானம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த மண்டல பூஜையின்போது சபரிமலை மொத்த வருமானம் 6 நாட்களில் ரூ.22 கோடியே 82 லட்சமாக இருந்தது.

இந்த ஆண்டு ரூ.8 கோடியே 48 லட்சமாக வருமானம் குறைந்துள்ளது. சபரிமலை பிரசாதமான அரவணை மூலம் கடந்த ஆண்டு ரூ.9 கோடியே 88 லட்சத்து 52 ஆயிரத்து 90 கிடைத்திருந்தது. இந்த ஆண்டு ரூ.3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 750 மட்டும்தான் கிடைத்துள்ளது. காணிக்கை வருமானமும் ரூ.7 கோடியே 33 லட்சத்து 72 ஆயிரத்து 285-ல் இருந்து ரூ.3 கோடியே 83 லட்சத்து 88 ஆயிரத்து 550 ஆக குறைந்து விட்டது.

சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டதால் விடுதி அறைகள் மூலம் கிடைக்கும் வருமானமும் இந்த முறை தேவசம் போர்டுக்கு கிடைக்கவில்லை. #Sabarimala
Tags:    

Similar News