செய்திகள்

விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு உடல்நிலை முன்னேறினால் மெகுல் சோக்சி ஆஜராவார் - வக்கீல் தகவல்

Published On 2018-11-18 23:47 GMT   |   Update On 2018-11-18 23:47 GMT
விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு மெகுல் சோக்சியின் உடல்நிலை தகுதியாக இருந்தால், அவர் கோர்ட்டில் ஆஜராவார் என்று மும்பை கோர்ட்டில் வக்கீல் தெரிவித்தார். #MehulChoksi #PunjabBankFraud #PNBFraud
மும்பை:

பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றி ரூ.13 ஆயிரத்து 400 கோடி மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிஓடி விட்டனர்.

மெகுல் சோக்சி விசாரணைக்கு ஆஜராகாததால், அவரை ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள்’ சட்டப்படி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரி, மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.



இதற்கு கடந்த மாதம் 30-ந் தேதி பதில் மனு தாக்கல் செய்த மெகுல் சோக்சி, தான் மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதாகவும், எனவே, 41 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து வர முடியாது என்றும் கூறி இருந்தார்.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் மனு, மும்பை கோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மெகுல் சோக்சி சார்பில் அவரது வக்கீல் சஞ்சய் அப்போட் ஆஜரானார். அவர் கோர்ட்டில் கூறியதாவது:-

மெகுல் சோக்சியின் உடல்நிலை, விமான பயணத்துக்கு தகுதியானதாக இல்லை. எனவே, வீடியோ கான்பரன்சிங் மூலமாகவோ அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆன்டிகுவா நாட்டுக்கு நேரில் சென்றோ அவரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யலாம். இல்லாவிட்டால், 3 மாதங்கள் காத்திருங்கள். மெகுல் சோக்சி உடல்நிலை முன்னேறினால், அவர் இந்தியாவுக்கு நேரில் வந்து ஆஜராவார்.

இவ்வாறு அவர் கூறினார். #MehulChoksi #PunjabBankFraud #PNBFraud
Tags:    

Similar News