search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mehul Choksi"

    • டொமினிக்கன் தீவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
    • சில நாட்களுக்கு முன்பு இன்டர்போலீஸ் ரெட் நோட்டீஸ் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆன்டிகுவா:

    இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பினார்.

    2018-ம் ஆண்டில் இருந்து ஆன்டிகுவா தீவில் வசித்து வந்த மெகுல் சோக்சி திடீரென்று மாயமானார். சில நாட்களுக்கு பிறகு அவர் டொமினிக்கன் தீவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அவரை டொமினிக்கன் தீவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆன்டிகுவா குடியுரிமை பெற்ற மெகுல் சோக்சியை அந்நாட்டுக்கு திரும்ப அனுப்ப அவரது வக்கீல்கள் தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

    இதையடுத்து ஆண்டிகுவாவுக்கு அனுப்பப்பட்ட மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது. இது தொடர்பான வழக்கு ஆன்டிகுவா அண்ட் பார்டிடா நாட்டில் உள்ள ஐகோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்நிலையில் மெகுல் சோக்சியை வலுக்கட்டாயமாக ஆன்டிகுவா மற்றும் பார்டிடா தீவில் இருந்து வெளியேற்ற முடியாது என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இதனால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேல் முறையீடு உள்ளிட்ட அனைத்து சட்டப் பூர்வ வாய்ப்புகளையும் இழந்த நிலையில் மெகுல் சோக்சிக்கு இந்த தீர்ப்பு சாதகமாக அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு இன்டர்போலீஸ் ரெட் நோட்டீஸ் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பித்த ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவை இன்டர்போல் நீக்கியது.
    • இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    புதுடெல்லி:

    பஞ்சாப் தேசிய வங்கி பணமோசடி வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் வைர வியாபாரி மெகுல் சோக்சி. அவருக்கு எதிராக பிறப்பித்த ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவை இன்டர்போல் நீக்கியது. எனினும், இந்தியாவில் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை இந்த நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது. இந்த வழக்கு விசாரணையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இருக்கிறது. ஆனால், மோடிஜியின் நமது மெகுல் பாய், இன்டர்போலில் இருந்து விடுவிக்கப்படுகிறார். சிறந்த நண்பருக்காக பாராளுமன்றம் முடக்கப்படும்போது 5 ஆண்டுக்கு முன் தப்பியோடிய பழைய நண்பருக்கு உதவுவதில் இருந்து எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும்? என பதிவிட்டுள்ளார்.

    • மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட்-கார்னர் நோட்டீசை இண்டர்போல் அமைப்பு ரத்து செய்துள்ளது.
    • மெகுல் சோக்சி ஆன்டிகுவா குடியுரிமை பெறுவதற்கு இந்திய அரசு தடையில்லாச் சான்றிதழை வழங்கியது.

    புதுடெல்லி:

    வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிரவ் மோடி லண்டனில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் பெற்றார். ஆன்டிகுவாவில் கடந்த 2018-ம் ஆண்டு குடியுரிமையும் பெற்றார். தேடப்படும் நபர்களை நாடு கடத்துதல் தொடர்பாக இந்தியா மேற்கொண்ட நாடுகளின் ஒப்பந்த பட்டியலில் ஆன்டிகுவா இல்லை. எனினும், அவரை நாடு கடத்துதல் தொடர்பான முயற்சிகளில் இந்திய விசாரணை முகமைகள் ஈடுபட்டன. மெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் சார்பில் ரெட்-கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில், மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட்-கார்னர் நோட்டீசை இண்டர்போல் அமைப்பு ரத்து செய்துள்ளது. இது இந்திய விசாரணை அமைப்புகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    மெகுல் சோக்சி விஷயத்தில் மத்திய பாஜக அரசு மீது ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா குற்றம்சாட்டி உள்ளார். தப்பியோடிய மெகுல் சோக்சிக்கு சிவப்பு கம்பள மரியாதை அளித்து அவரை காப்பாற்ற பாஜக முயற்சிப்பதாக ராகவ் சத்தா கூறியிருக்கிறார்.

    மெகுல் சோக்சி ஆன்டிகுவா குடியுரிமை பெறுவதற்கு இந்திய அரசு தடையில்லாச் சான்றிதழை வழங்கியது. அதேபோல் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் அவருக்கு எதிராக உறுதியான ஆதாரங்களை வழங்கத் தவறியதால், அவரது பெயர் ரெட் கார்னர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் ராகவ் சத்தா தெரிவித்தார்.

    • மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. மேலும் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
    • மெகுல் சோக்சி, அவரது நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 7 ஆனது

    புதுடெல்லி:

    இந்தியாவின் முக்கிய வைர வியாபாரிகளில் ஒருவராக இருந்தவர் மெகுல் சோக்சி. இவர் மோசடி ஆவணங்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578 கோடி ரூபாயை கடனாக பெற்றார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கின் விசாரணையின் போதே மெகுல் சோக்சி, கரீபியன் நாடுகளில் ஒன்றான டொமினிகாவின் ஆன்டிகுவா தீவில் குடியுரிமை பெற்று தஞ்சம் அடைந்தார்.

    இந்நிலையில், மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. மேலும் 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. பஞ்சாப் தேசிய வங்கியின் துணை மேலாளர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இத்துடன் மெகுல் சோக்சி மற்றும் அவரது நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மெகுல் சோக்சி கடந்த ஆண்டு டொமினிகா நாட்டினுள் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அந்த நாட்டின் ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சியும் ஆளாகி உள்ளனர்.

    மெகுல் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பி ஓடி கரீப்பியன் தீவு நாடான ஆன்டிகுவா பார்புடாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு டொமினிகா நாட்டினுள் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அந்த நாட்டின் ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.

    தன்னை ஆன்டிகுவாவில் இருந்து சிலர் கடத்தி வந்து, டொமினிகாவில் அடைத்து வைத்திருந்ததாக மெகுல் சோக்சி கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வழக்கு நீடித்தது. இப்போது அந்த வழக்கை டொமினிகா அரசு ரத்து செய்துள்ளது.

    இந்த தகவலை சோக்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
    விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகிய 3 பேரும் பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி, தங்கள் நிறுவனங்கள்மூலம் நிதி மோசடி செய்து, ரூ.22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் இழப்பினை ஏற்படுத்தி உள்ளனர்.
    புதுடெல்லி :

    பிரபல தொழில் அதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர்.

    அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்து, வழக்குகளை சந்திக்க வைப்பதற்கான மத்திய அரசின் முயற்சிக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. இவர்கள் சொத்துகள் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    3 பேரும் பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி, தங்கள் நிறுவனங்கள்மூலம் நிதி மோசடி செய்து, ரூ.22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் இழப்பினை ஏற்படுத்தி உள்ளனர்.

    கடந்த 15-ந் தேதி நிலவரப்படி, இவர்களது ரூ.19 ஆயிரத்து 111 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ரூ.19 ஆயிரத்து 111 கோடியே 20 லட்சம் சொத்துக்களில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.15 ஆயிரத்து 113 கோடியே 91 லட்சம் சொத்துகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.335 கோடியே 6 லட்சம் மத்திய அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கடந்த 15-ந் தேதி நிலவரப்படி, இந்த வழக்குகளில் மோசடி செய்யப்பட்டுள்ள மொத்த நிதியில் 84.61 சதவீதம், வங்கிகளிடமும், மத்திய அரசிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு, அமலாக்க இயக்குனரகம் தங்களுக்கு ஒப்படைத்த சொத்துகளை விற்று ரூ.7,975.27 கோடியை ஈட்டி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கலாம்....புதினுடன் நேரடியாக பேச தயார்: உக்ரைன் அதிபர்
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். #PNBFraud #MehulChoksi #IndianCitizenship
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ்மோடி ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. வெளிநாடு தப்பிச்சென்ற அவர்கள் இருவரையும் இந்தியா தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது.

    ஆண்டிகுவா நாட்டுக்கு தப்பிச்சென்ற மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்துவர தூதரகம் வழியாகவும், சட்டரீதியாகவும் இந்தியா முயற்சி செய்துவருகிறது. இந்நிலையில் மெகுல் சோக்சி கடந்த ஆண்டு ஆண்டிகுவா நாட்டின் குடியுரிமை பெற்றார். இந்திய குடிமக்கள் வெளிநாட்டு குடியுரிமை பெறும்போது தங்கள் இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அதன்படி மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.  #PNBFraud #MehulChoksi #IndianCitizenship 
    வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான மெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. #RedCornerNotice #MehulChoksi
    புதுடெல்லி:

    குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.  இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.



    இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி சர்வதேச போலீசை (இண்டர்போல்) சிபிஐ கேட்டுக்கொண்டது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்ற இண்டர்போல், மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இத்தகவலை சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள் இன்று தெரிவித்துள்ளார்.

    தன் மீதான வழக்குகள் அனைத்தும் அரசியல் சதியின் விளைவு என்று மெகுல் சோக்சி கூறியதாகவும், இந்தியாவில் சிறைச்சாலையில் உள்ள வசதிகள், தனது பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது தப்பி ஓடியவர்களை கைது செய்வதற்காக இண்டர்போல் தனது உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் சர்வதேச கைது வாரண்ட் ஆகும். குற்றம் சாட்டப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சொந்த நாட்டுக்கு அவரை கடத்த வேண்டும். #RedCornerNotice #MehulChoksi

    விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு மெகுல் சோக்சியின் உடல்நிலை தகுதியாக இருந்தால், அவர் கோர்ட்டில் ஆஜராவார் என்று மும்பை கோர்ட்டில் வக்கீல் தெரிவித்தார். #MehulChoksi #PunjabBankFraud #PNBFraud
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றி ரூ.13 ஆயிரத்து 400 கோடி மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிஓடி விட்டனர்.

    மெகுல் சோக்சி விசாரணைக்கு ஆஜராகாததால், அவரை ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள்’ சட்டப்படி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரி, மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.



    இதற்கு கடந்த மாதம் 30-ந் தேதி பதில் மனு தாக்கல் செய்த மெகுல் சோக்சி, தான் மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதாகவும், எனவே, 41 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து வர முடியாது என்றும் கூறி இருந்தார்.

    இந்நிலையில், அமலாக்கத்துறையின் மனு, மும்பை கோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மெகுல் சோக்சி சார்பில் அவரது வக்கீல் சஞ்சய் அப்போட் ஆஜரானார். அவர் கோர்ட்டில் கூறியதாவது:-

    மெகுல் சோக்சியின் உடல்நிலை, விமான பயணத்துக்கு தகுதியானதாக இல்லை. எனவே, வீடியோ கான்பரன்சிங் மூலமாகவோ அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆன்டிகுவா நாட்டுக்கு நேரில் சென்றோ அவரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யலாம். இல்லாவிட்டால், 3 மாதங்கள் காத்திருங்கள். மெகுல் சோக்சி உடல்நிலை முன்னேறினால், அவர் இந்தியாவுக்கு நேரில் வந்து ஆஜராவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MehulChoksi #PunjabBankFraud #PNBFraud
    வங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியிடம் அருண் ஜெட்லியின் மகள் ஊதியம் பெற்றதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். #ArunJaitley #ArunJaitleyDaughter #MehulChoksi #RahulGandhi
    புதுடெல்லி:

    வங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியிடம் அருண் ஜெட்லியின் மகள் ஊதியம் பெற்றதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். எனவே, அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    பிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர். இந்நிலையில், மெகுல் சோக்சியிடம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் மகள் ஊதியம் பெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.



    தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:- திருடர் மெகுல் சோக்சியிடம் சம்பளம் பெறுவோர் பட்டியலில் அருண் ஜெட்லியின் மகள் இருந்துள்ளார். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கணக்கில் இருந்து அவரது பெயருக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. (வங்கிக்கணக்கு எண்ணையும் வெளியிட்டுள்ளார்).

    ஆனால், அவருடைய தந்தையான நிதி மந்திரி அருண் ஜெட்லி, மெகுல் சோக்சியின் கோப்புகள் மீது முடிவு எடுக்காமல் தாமதம் செய்தார். அதன்மூலம் மெகுல் சோக்சியை தப்பி ஓட அனுமதித்தார்.

    எனவே, அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை ஊடகங்கள் மூடி மறைத்து விட்டன. ஆனால், நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். #ArunJaitley #ArunJaitleyDaughter #MehulChoksi #RahulGandhi 
    வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்படும் மெகுல் சோக்சியை இந்தியாவிற்கு நாடு கடத்தத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஆண்டிகுவா முன்வந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PNBFraudCase #MehulChoksi
    நியூயார்க்:

    ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ஆண்டிகுவா வெளியுறவு மந்திரி சேட் கிரீனைச் சந்தித்துப் பேசினார்.



    அப்போது பிஎன்பி வங்கிக் கடன் மோசடியில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சியை நாடு கடத்த உதவுமாறு அவரிடம் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். மெகுல் சோக்சியை நாடு நடத்தும் நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆண்டிகுவா வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.

    இந்தத் தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித்தொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்தார். இந்தியாவுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஆண்டிகுவா உடன்பட்டுள்ளதாகவும், அதேநேரத்தில் குறித்த காலவரையறை எதையும் கூறவில்லை என்றும் ரவீஸ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண்டிகுவா பிரதமர் எழுதிய கடிதத்தில், மெகுல் சோக்சியின் பாஸ்போர்ட் சட்டப்பூர்வமாக பெறப்பட்டது என்பதால் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய முடியாது என்று கூறியிருந்தார். அவருக்கு எதிராக எந்த சட்டவிரோத புகார்களும் இல்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    வங்கி மோசடி வெளிப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, ஜனவரி மாதம் சோக்சி இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார். பின்னர் ஆண்டிகுவா பார்புடா குடியுரிமை பெற்றுள்ளார். #PNBFraudCase #MehulChoksi
    இந்தியாவுக்கு கொண்டு வந்து என்னை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று டி.வி. விவாதத்தில் பேசி வருவதால், என் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யுங்கள் என்று நகை வியாபாரி மெகுல் சோக்சி மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #MehulChoksi
    மும்பை:

    பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றி, ரூ.12 ஆயிரத்து 636 கோடி மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய உறவினரும், கீதாஞ்சலி குழும நிர்வாக இயக்குனருமான மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மீது சி.பிஐ. வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, நிரவ் மோடி, மெகுல் சோக்சி இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டனர். மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.

    அவற்றின் அடிப்படையில், கடந்த மே 22-ந் தேதி, மும்பை தனிக்கோர்ட்டு, மெகுல் சோக்சிக்கு எதிராக ‘பிடிவாரண்டு’ பிறப்பித்தது. அதை ரத்து செய்யக்கோரி, கடந்த ஜூன் மாதம் ஏற்கனவே அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், மெகுல் சோக்சி சார்பில் அவருடைய வக்கீல் சஞ்சய் அப்பாட், நேற்று மும்பை தனிக்கோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-


    தேசிய செய்தி தொலைக்காட்சி ஒன்றில் சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சி பார்த்தேன். அதில், தொலைபேசி மூலம் பேசிய 2 பேர், “தனிப்படை மூலம் என்னை பிடித்து இந்தியாவுக்கு கொண்டு வந்து சுட்டுக்கொல்ல வேண்டும். அப்போதுதான், இனிமேல் வங்கி மோசடிகளை நிறுத்த முடியும்” என்று பேசினர்.

    அதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். நிகழ்ச்சி தொகுப்பாளரும், விவாதத்தில் பங்கேற்றவர்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சிரித்தபடி இருந்தனர். இதனால், அவர்களும் அக்கருத்தை ஆதரிப்பது போல் உள்ளது.

    ஆகவே, இந்தியாவுக்கு கொண்டு சென்றால், என்னை சுட்டுக்கொல்லவோ, கும்பல் கொலை செய்யவோ வாய்ப்புள்ளது. இதை கருத்திற்கொண்டு, எனக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மெகுல் சோக்சி கூறியுள்ளார்.

    இதற்கு சி.பி.ஐ. பதில் அளிக்குமாறு கூறிய கோர்ட்டு, அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.  #pnbfraudcase #MehulChoksi #NiravModi
    ×