செய்திகள்

கங்கை ஆற்றில் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்துக்கான முதல் முனையம் - மோடி தொடங்கி வைத்தார்

Published On 2018-11-12 10:55 GMT   |   Update On 2018-11-12 10:55 GMT
உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்துக்காக கங்கை ஆற்றில் அமைக்கப்பட்ட முதல் முனையத்தை வாரணாசி நகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். #PMmodiinVaranasi #Varanasidevelopmentschemes #multimodalterminal
லக்னோ:

பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

உலக வங்கியின் நிதி பங்களிப்புடன் 5,369.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின்கீழ் அமைந்துள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்நிலை சரக்கு கப்பல் போக்குவரத்து முனையத்தை அவர் தொடங்கி வைத்தார்.

இந்திய நீர்வழி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி ஹல்தியா-வாரணாசி இடையில் கங்கை ஆற்றில் சுமார் 2 ஆயிரம் எடையுடன் சரக்கு கப்பல்கள் சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக இந்த திட்டம் ஹல்தியா, சாஹிப்கஞ்ச், வாரணாசி ஆகிய பகுதிகளில் சரக்கு முனையங்கள் அமைத்து விரிவுப்படுத்தபடும். உ.பி. முதல்- மந்திரி யோகி ஆதித்யாநாத்  மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர். 

மேலும்,  1,571.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வாரணாசி நாற்கர விரைவு நெடுஞ்சாலை மற்றும் பாபத்பூர்-வாரணாசி நெடுஞ்சாலைகளை மோடி இன்று மாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த புதிய சாலைகள் மூலம் லக்னோ-வாரணாசி, அசாம்கர்-வாரணாசி, கோரக்பூர்-வாரணாசி, அயோத்தியா வாரணாசி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். வாகனங்களுக்கான எரிபொருள் செலவும் மிச்சமாகும் என கருதப்படுகிறது.

வாஜித்பூர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசும் மோடி இன்றிரவு டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #PMmodiinVaranasi  #Varanasidevelopmentschemes #multimodalterminal
Tags:    

Similar News