செய்திகள்

தெலுங்கானா எம்.பி. நிறுவனத்தில் ரூ.60 கோடி கறுப்பு பணம் சிக்கியது - வருமான வரித்துறை சோதனை

Published On 2018-11-09 11:30 GMT   |   Update On 2018-11-09 11:30 GMT
தெலுங்கானா எம்.பி.நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.60 கோடி கறுப்பு பணம் சிக்கியுள்ளது. #TelanganaMP #IncomeTax

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் சீனிவாச ரெட்டி எம்.பி.

இவர் “ராகவ்கன்ஸ்ட் டிரக்கன் குரூப்” எனும் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது சகோதரர் பிரசாத் ரெட்டி. அந்த கட்டுமான நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக உள்ளார்.

அந்த கட்டுமான நிறுவனத்தில் பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடப்பதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் ராகவ் கட்டுமான நிறுவனத்தில் ஐதராபாத் அலுவலகத்தில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அந்த ஆவணங்கள் அனைத்தும் தனிப்படை அமைத்து ஆய்வு செய்யப்பட்டன.


அந்த ஆவணங்கள் மூலம் ராகவ் கட்டுமான நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்தது. அது மட்டுமின்றி பல கோடி ரூபாய் கருப்புப் பணம் அந்த நிறுவனத்தில் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது.

அந்த கருப்புப் பணம் பற்றி அதிகாரிகள் குழு தனியாக ஆய்வு செய்தது. அப்போது ராகவ் கட்டுமான நிறுவனத்தில் ரூ.60 கோடி அளவுக்கு கருப்பு பணம் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அந்த ரூ.60 கோடி கருப்புப் பண ஆவணங்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ராகவ் நிறுவனம் எந்தெந்த பணிகளுக்கு கருப்பு பணத்தை பயன்படுத்தி உள்ளது என்ற சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனிவாச ரெட்டி எம்.பி.யிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #TelanganaMP #IncomeTax

Tags:    

Similar News