செய்திகள்

சிபிஐ இயக்குனர், சிறப்பு இயக்குனரின் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

Published On 2018-10-25 13:32 GMT   |   Update On 2018-10-25 15:08 GMT
சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனருக்கு அளிக்கப்பட்ட கட்டாய விடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CBI #AlokVerma #NageswaraRao #CBIVsCBI
புதுடெல்லி:

சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய தொழில் அதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதன்மூலம், சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டது.  

அதன்பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கையாக சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. கைது செய்தது. இவ்வாறு சி.பி.ஐ. இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை தற்காலிக சி.பி.ஐ. இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 



மேலும், இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் செல்லலாம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை கடுமையாக எதிர்த்த அலோக் வர்மா, மற்றும் சிறப்பு இயக்குனர் ராஜேஷ் அஸ்தானா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  #CBI #AlokVerma #NageswaraRao #CBIVsCBI
Tags:    

Similar News