செய்திகள்

கொல்கத்தா மெட்ரோ ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த 10 பேர் கைது

Published On 2018-10-09 21:57 GMT   |   Update On 2018-10-09 21:57 GMT
மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 10 பேர் அடங்கிய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். #Womanmolested
கொல்கத்தா :

மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்லி மாவட்டத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண், தான் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் போது ஒரு கும்பல் தவறான வார்த்தைகளில் தன்னிடம் பேசி தகாத முறையில் நடந்துகொண்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் 10 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் பயணித்த மெட்ரோ ரெயில் பெட்டியில் யாரும் இல்லாத நிலையில் எஸ்ப்லாண்ட் ரயில் நிலையத்தில் 10 பேர் கொண்ட கும்பல் ரெயிலில் ஏறியுள்ளனர். யாரும் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கும்பல் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தது மட்டுமல்லாமல் உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

பின்னர் மகானாயக் ரெயில் நிலையத்தில் அந்த பெண் ரெயிலை விட்டு இறங்கிய பின்னரும் அவர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இதனால் அங்கிருந்த ரெயில்வே போலீசாரிடம் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் அவர்களை மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர், அந்த 10 பேர் மீதும் ஐ.பி.சி பிரிவு  354, 354பி, 509-ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். #Womanmolested
Tags:    

Similar News