செய்திகள்

பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய ராணுவம் மீண்டும் துல்லிய தாக்குதல் நடத்தியது- ராஜ்நாத்சிங் சூசக தகவல்

Published On 2018-09-29 08:16 GMT   |   Update On 2018-09-29 08:16 GMT
சர்ஜிக்கல் ஸ்டிரைக் பாணியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தியதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சூசகமாக தெரிவித்துள்ளார். #RajnathSingh #SurgicalStrikes
முசாபூர்நகர்:

காஷ்மீரில் கடந்த 18-ந் தேதி சம்பா மாவட்ட எல்லைப் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. அதில் நரேந்திர சிங் என்ற ராணுவ வீரர் உயிர் இழந்தார்.

பாகிஸ்தான் வீரர்கள் எல்லை தாண்டி வந்து நரேந்திர சிங்கின் உடலை இழுத்துச் சென்றனர். தங்கள் பகுதியில் வைத்து அவரது கழுத்தை அறுத்து கொடூர செயலில் ஈடுபட்டனர்.

மறுநாள் 19-ந்தேதி அவரது உடலை எல்லைப் பாதுகாப்பு படையினர் மீட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் மீது இந்தியா பல்வேறு நிலைகளில் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டது.

இந்த நிலையில் நரேந்திர சிங் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்த வார தொடக்கத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் அதிரடியாக புகுந்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இது இந்தியா நடத்தியிருக்கும் 2-வது துல்லிய தாக்குதல் ஆகும்.

இந்த தகவலை உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று சூசகமாக வெளியிட்டார். முசாபூர் நகரில் பகவத்சிங் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-


பாகிஸ்தான் நாட்டுக்கு பயங்கர பதிலடியை நமது ராணுவம் கொடுத்துள்ளது. சில அதிரடிகள் நடந்துள்ளன. எதிரிகளுக்கு பயங்கர இழப்பு ஏற்பட்டுள்ளது. அது என்ன என்ற விவரத்தை என்னால் இப்போது முழுமையாக சொல்ல முடியாது.

இன்னும் 2 நாட்களில் என்ன நடந்தது என்பது பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிய வரும். அப்போது நமது ராணுவம் எப்படி நடந்து இருக்கிறது என்பதை அறிந்து கொள்வீர்கள். எதிர் காலத்திலும் என்ன நடக்க போகிறது என்பதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

பாகிஸ்தான் நமது பக்கத்து நாடாகும். நாம் அவர்களுடன் தோழமை உணர்வுடன்தான் இருக்கவே விரும்புகிறோம். எனவே எல்லையில் எந்த காரணத்தை கொண்டும் முதலில் நாம் தாக்குதலை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறேன்.

ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எல்லை மீறி ஊடுருவி வந்து தாக்குதல் நடத்தினால் மிகப்பயங்கர பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ளேன். எதைப்பற்றியும் யோசிக்காமல் சுட்டுக் கொல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் தரப்பில் இருந்து ஒரு தோட்டா வந்தால் நமது தரப்பில் இருந்து பல தோட்டாக்கள் பாய வேண்டும் என்று ராணுவ வீரர்களிடம் சொல்லப்பட்டு உள்ளது. துப்பாக்கி குண்டுகள் எண்ணிக்கை பற்றி கவலைப்படாமல் பதிலடி கொடுக்க கூறி உள்ளோம்.

சீனாவும் நமது எல்லையில் ராணுவத்தை பயன்படுத்தாமல் நெருக்கடி கொடுத்தது. ஆனால் அதிலிருந்து அவர்கள் இந்தியா பலவீனமான நாடு அல்ல என்பதை புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

எனவே எல்லையில் நமது ராணுவம் மூலம் பதிலடிகள் உடனுக்குடன் கொடுக்கப்படும். எல்லை தாண்ட நினைப்பவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும்.

இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார். #RajnathSingh #SurgicalStrikes
Tags:    

Similar News