செய்திகள்
கருப்புப் பணம் நாட்டை விட்டு வெளியேறுவதால் தான் ரூபாயின் மதிப்பு சரிகிறது - சுப்பிரமணிய சாமி
நாட்டை விட்டு கருப்புப் பணம் வெளியேறுவதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது என சுப்பிரமணிய சாமி குறிப்பிட்டுள்ளார். #blackmoney #SubramanianSwamy
பனாஜி:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. பெட்ரோ, டீசல் விலை அதிகரிப்புக்கு இதுவே காரணம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், கோவாவில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சாமி, கருப்புப் பணம் நாட்டை விட்டு ஒழிவதால் தான் ரூபாயின் மதிப்பு சரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் முன்னேறிய நாடாக அமெரிக்கா இருக்கும்வரை அமெரிக்கா டாலரின் மதிப்பு சக்திவாய்ந்ததாக, உயர்வடைந்து கொண்டுதான் இருக்கும். நாட்டில் இருந்து கருப்புப்பணமாக இந்திய ரூபாய் வெளியே சென்று கொண்டிருப்பதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பு சரிகின்றது.
இந்தியாவில் இருக்கும் பணத்தின் பெரும்தொகை கருப்புப் பணமாக உள்ளது. இந்த பணம் தற்போது நாட்டில் இருந்து வெளியே செல்கிறது. இப்படி, டாலருக்கு நிகராக மாற்றப்படும் ரூபாயின் மதிப்பு சரிவடையத்தான் செய்யும்.
மிகவும் வளர்ந்த நாடு என்ற நிலையை அமெரிக்கா இழக்க நேரும்போது மற்ற நாடுகளின் பண மதிப்பு கூடும். அதுவரை சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதை தடுக்க இயலாது என்றும் சுப்பிரமணிய சாமி குறிப்பிட்டார். #Rupeeagainstdollar #blackmoney #SubramanianSwamy