செய்திகள்

ராஜஸ்தான் தேர்தல்- மக்களிடம் நிதி திரட்டும் காங்கிரஸ் கட்சி

Published On 2018-09-18 09:20 GMT   |   Update On 2018-09-18 09:20 GMT
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலுக்காக மக்களிடம் ஆன்லைன் மூலம் நிதி திரட்டும் பிரசாரத்தை மாநில காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் தொடங்கி வைத்தார். #Congress #RajasthanElection
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அங்கு சட்டசபை பதவிக்காலம் முடிவடைகிறது.

200 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கிறது.

ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜனதாவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் இப்போதே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி, தேர்தல் பிரசாரத்துக்கு நிதி இல்லாமல் தவிக்கிறது. இதனால் மக்களிடம் ஓட்டு கேட்பது மட்டுமல்லாமல் நிதியும் கேட்கிறது. ஆன்லைன் மூலம் நிதி திரட்டும் பிரசாரத்தை மாநில காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் தொடங்கி வைத்தார்.

அவர் கூறும்போது, ‘‘அரசியல் நிதியில் வெளிப்படை தன்மையை கொண்டு வரும் நோக்கில் நாங்கள் செயல்பட உள்ளோம். இதனால் ராஜஸ்தான் காங்கிரஸ் நிதி பிரசாரத்துக்கு அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும்’’ என்றார்.

முதல் நாளில் 168 ஆதரவாளர்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.2.47 லட்சம் வசூலாகி உள்ளது. அதிகபட்சமாக ஒருவர் ரூ.25 ஆயிரம் நிதி வழங்கியுள்ளார். குறைந்த பட்சமாக ரூ.100 கிடைத்துள்ளது.

பா.ஜனதாவின் பண பலத்துக்கு ஈடுகொடுக்க மாநில காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. #Congress #RajasthanElection
Tags:    

Similar News