செய்திகள்

ரெயில்வே கேட்டை திறக்க மறுத்ததால் ஊழியரின் கைகளை துண்டாக்கிய கொடூரம்

Published On 2018-09-17 23:05 GMT   |   Update On 2018-09-17 23:05 GMT
ரெயில்வே கேட்டை திறக்க மறுத்ததால் ஊழியரின் கைகளை துண்டாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #RailwayGate #Gateman #CrossingGate
புதுடெல்லி:

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள நரேலா என்கிற இடத்தில் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு கேட் கீப்பராக குந்தன் பதாக் (வயது 28) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த குந்தன் பதாக், எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதையொட்டி வழக்கம் போல் கேட்டை அடைத்தார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ரெயில்வே கேட்டை உடனடியாக திறக்கும்படி குந்தன் பதாக்கிடம் கூறினர்.

அதற்கு அவர் ‘ரெயில் மிக அருகாமையில் வந்துவிட்டது, எனவே கேட்டை திறக்க முடியாது’ என அவர்களிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கூர்மையான ஆயுதத்தை எடுத்து குந்தன் பதாக்கின் 2 கைகளையும் வெட்டினர். இதில் அவருடைய 2 கைகளும் துண்டாகின. மேலும் அவருடைய கழுத்து, கால் ஆகிய பகுதிகளிலும் பலமாக தாக்கிவிட்டு அந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் குந்தன் பதாக்கை மீட்டு அருகில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

வெட்டப்பட்ட அவருடைய கைகளை இணைப்பதற்காக தீவிர அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அவருடைய மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்பதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #RailwayGate #Gateman #CrossingGate
Tags:    

Similar News