செய்திகள்

கேரளாவில் மூலிகை மயக்க மருந்து கொடுத்து தொழில் அதிபர் வீட்டில் கைவரிசை

Published On 2018-09-17 10:16 GMT   |   Update On 2018-09-17 10:16 GMT
கேரள மாநிலம் மலப்புரம் அருகே மூலிகை மயக்க மருந்து கொடுத்து தொழில் அதிபர் வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திரூரை சேர்ந்தவர் ஹயாத் அலி. தொழில் அதிபர். இவரது மனைவி சைனபா. இவர்களுக்கு பிதா என்ற மகள் உள்ளார். இவர்களது வீட்டில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மாரியம்மாள் (வயது 47) என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று ஹயாத் அலியின் வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது ஹயாத்அலி, சைனபா, பிதா ஆகியோர் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

உடனடியாக 3 பேரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது 3 பேருக்கும் மயக்க மூலிகை மருந்து கொடுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

பின்னர் உறவினர்கள் ஹயாத் அலியின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் வேலை பார்த்த மாரியம்மாள் மாயமாகி இருந்தார். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. தற்போது ஹயாத்அலி உள்பட 3 பேரும் மயக்க நிலையில் இருப்பதால் எவ்வளவு நகை மற்றும் பணம் கொள்ளை போனது என்பது தெரியவில்லை.

இது குறித்து அவரது உறவினர்கள் திரூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாரியம்மாளை வலை வீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News