செய்திகள்

நிதி பற்றாக்குறை அளவு 3.3 சதவீதத்தை கடக்காது - அருண் ஜெட்லி நம்பிக்கை

Published On 2018-09-15 15:17 GMT   |   Update On 2018-09-15 15:17 GMT
நாட்டின் பொருளாதாரம் குறித்து இன்று பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்திய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிதி பற்றாக்குறை அளவு 3.3 சதவீதத்தை கடக்க விட மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். #fiscaldeficittarget #ArunJaitley
புதுடெல்லி:

பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரிப்பு மற்றும் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவற்றை  தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

நேற்றும் இன்றும் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நிதித்துறை உயரதிகாரிகள், ரிசர்வ் வங்கி கவர்னர் பிரதமரின் நிதித்துறை ஆலோசகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்றிரவு நடைபெற்ற ஆய்வு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, இந்த ஆண்டின் நிதி பற்றாக்குறை அளவு 3.3 சதவீதத்தை கடக்க விட மாட்டோம் என உறுதி அளித்தார்.

கடந்த ஆண்டு கணிக்கப்பட்ட இலக்கையும் கடந்து இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என நம்புகிறோம். பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. 

முதன்மை செலவினங்களை பொருத்தவரை ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி நிலவரப்படி, ஒதுக்கீடு தொகையில் 44 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. எவ்வித வெட்டுகளும் இல்லாமல் இந்த  ஆண்டுக்கான முதன்மை செலவினங்கள் நூறு சதவீத ஒதுக்கீட்டுக்குள் இருக்கும் வகையில் நிர்வகிப்போம். 

இந்த ஆண்டில் வருமான வரி வசூல் அபரிமிதாக உள்ளதால் செலவினங்களை சரி கட்ட ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி மூலம் கிடைக்கும் பணம் உதவிகரமாக இருக்கும் என்றும் அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். #fiscaldeficittarget  #ArunJaitley
Tags:    

Similar News