செய்திகள்

இறக்குமதி மணலுக்கான தொகையை செலுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-09-12 05:58 GMT   |   Update On 2018-09-12 05:58 GMT
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலுக்கான தொகையை செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ImportedSand #SupremeCourt
புதுடெல்லி:

மலேசியாவில் இருந்து ராமையா நிறுவனம் இறக்குமதி செய்த மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுத்துச் சென்று விற்க தமிழக அரசு தடை விதித்தது. தடையை எதிர்த்து மணல் இறக்குமதி நிறுவனங்கள் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மதுரை ஐகோர்ட்டு அரசின் தடை உத்தரவை ரத்து செய்தது.



இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது, இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்கிக்கொள்வதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக மணல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது டன்னுக்கு 2050 ரூபாய் வழங்க தமிழக அரசு தெரிவித்தது.

இது தொடர்பாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை ஒரு டன் ரூ.2,050-க்கு கொள்முதல் செய்து தமிழக அரசே விற்கலாம் என்று அனுமதி அளித்து விசாரணையை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கான தொகையை செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு டன்னுக்கு 2050 ரூபாய் வீதம் 55 ஆயிரம் டன் மணலுக்கான தொகையை (ரூ.11.27 கோடி) ஒரு வாரத்திற்குள் செலுத்தும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #ImportedSand #SupremeCourt
Tags:    

Similar News