செய்திகள்

மரபணு மாற்ற கடுகு பயிரிட விரைவில் அனுமதி- மத்திய அரசு தீவிர ஆலோசனை

Published On 2018-09-05 05:54 GMT   |   Update On 2018-09-05 05:54 GMT
இந்தியாவில் மரபணு மாற்ற கடுகுகளை பயிரிட விரைவில் அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. #CentralGovernment
புதுடெல்லி:

பல நாடுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்கள், காய்கறி- பழங்கள் போன்றவற்றை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

இதேபோல் இந்தியாவிலும் மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களை அறிமுகப்படுத்த தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை உற்பத்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டது.

தற்போது மரபணு மாற்றப்பட்ட பருத்தியை மட்டும் பயிரிட அனுமதி அளித்துள்ளனர். பருத்தி உணவு பொருள் அல்ல என்பதால் இந்த அனுமதி கிடைத்துள்ளது.

இப்போது மரபணு மாற்றப்பட்ட கடுகை பயிரிட அனுமதிப்பது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன.

வடமாநிலங்களில் கடுகு மூலம் எடுக்கப்படும் எண்ணையையே அதிக அளவில் சமையலில் பயன்படுத்துகிறார்கள். மரபணு மாற்றப்பட்ட கடுகை உற்பத்தி செய்தால் எண்ணை தேவையை பெருமளவு பூர்த்தி செய்யலாம் என்பதால் மரபணு மாற்ற கடுகை உற்பத்தி செய்ய முயற்சிகள் நடக்கிறது.

இந்த கடுகை டெல்லி பல்கலைக்கழக மரபணு மாற்றல் மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த கடுகை விவசாயம் செய்தால் அதில், பூச்சி தாக்குதல்கள், நோய் தாக்குதல்கள் ஏற்படாது. அதை சமாளித்து வளரும் வகையில் மரபணு மாற்றம் செய்து விதை உரு வாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கடுகு தேனீக்கள், புழு பூச்சிகள் பேக்டீரியாக்கள் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உயிரியல் முறையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் ஒரு தரப்பினர் எச்சரிக்கிறார்கள்.

மேலும் இந்த கடுகினால் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். புற்றுநோய் உள்ளிட்டவற்றை உருவாக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக மத்திய சுற்றுச்சூழல் துறை மரபணு மாற்ற கடுகுக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டது.

ஆனால், சில கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. குறிப்பிட்ட பகுதிகளில் இந்த கடுகுகளை பயிரிட்டு ஆய்வு செய்தனர். ஆனால், உயிரியல் பாதிப்புகள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

எனவே, மரபணு மாற்ற கடுகுகளை அனுமதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இதுசம்பந்தமாக மரபணு மாற்ற தொழில்நுட்ப கமிட்டியின் கூட்டம் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. அதில், மரபணு கடுகை அனுமதிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கிறார்கள்.

பரவலாக இல்லாமல் சில பகுதிகளில் மட்டும் இவற்றை பயிரிட்டு பரீட் சார்த்தமாக ஆய்வு செய்வது என்றும், அது நல்ல பலனை கொடுத்தால் அனைத்து இடங்களிலும் மரபணு மாற்ற கடுகு பயிரிட அனுமதிப்பது என்று முடிவு செய்ய இருக்கிறார்கள். #CentralGovernment
Tags:    

Similar News