செய்திகள்

அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகள் - மத்திய அரசின் நடவடிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

Published On 2018-08-31 03:00 IST   |   Update On 2018-08-31 03:00:00 IST
அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டுகள் அமைப்பதில் மத்திய அரசு இன்னும் முழுஅளவில் தயாராகவில்லை என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
புதுடெல்லி:

வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க பல்வேறு மாநிலங்களில் 12 தனிக்கோர்ட்டுகளை அமைக்கவேண்டும் என்றும், அவை கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்றும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

பின்னர் இது தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் டெல்லியில் 2 தனிக்கோர்ட்டுகளும் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தலா ஒரு தனிக்கோர்ட்டும் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தனிக்கோர்ட்டுகள் அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் ஐகோர்ட்டுகள் அறிவிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டுகள் அமைப்பதில் மத்திய அரசு இன்னும் முழுஅளவில் தயாராகவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பிக்கும் கட்டாய சூழ்நிலையை அரசு ஏற்படுத்துவதாகவும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தாங்கள் அதை விரும்பவில்லை என்றும் கூறினார்கள். 
Tags:    

Similar News